வடக்கில் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படுவது தவறான விடயமாகும், அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா என தெரிவித்துள்ளார்.
அது அரசால் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், போரில் உயிரிழந்த தமது உறவுகளையே நினைவு கூருகின்றோம் என அவர்கள் தரப்பில் இருந்து கூறப்படுகின்றது.
இறந்தவர்களை நினைவு கூருவது தவறில்லை. ஆனால், பிரபாகரன் உயிரிழந்த இடத்துக்கே சென்று, அவர் இறந்த நாளில் அதனைச் செய்வது தவறு.
பிரபாகரன் உள்ளிட்ட தமிழீழ விடுதலைப் புலிகளைக் கௌரவப்படுத்தும் நோக்கில் அவர்களை நினைவு கூருவது தவறாகும். அது தேசத்துரோக நடவடிக்கையாகவே கருதப்படும்.
இப்படியான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். தேசிய பாதுகாப்பு என வரும்போது வாக்குகளைக் கருத்திற்கொள்ளக்கூடாது. முதுகெலும்புடன் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் அண்மைக்காலமாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் கருத்துக்கள் இனவாதத்தை பரப்பும் வகையில் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கருத்து நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.