6 53
இலங்கைசெய்திகள்

பேரவலத்தின் சாட்சியாக முள்ளிவாய்க்காலில் நினைவாலயம் அமையுங்கள் – ரவிகரன் எம்.பி கோரிக்கை

Share

பேரவலத்தின் சாட்சியாக முள்ளிவாய்க்காலில் நினைவாலயம் அமையுங்கள் – ரவிகரன் எம்.பி கோரிக்கை

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பேரவலத்தின் சாட்சியாக, நினைவாலயம் ஒன்று அமைக்கப்பட வேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று சர்வதேச இறையாண்மை பிணைமுறி மறுசீரமைப்பு தொடர்பான விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 2024 நவம்பர் 27 ஆம் திகதி எமது மக்கள் தங்களின் உறவுகளுக்கு எதுவித இடர்பாடுமின்றி, அமைதியாக தமது அஞ்சலிகளை செலுத்தி தமது உணர்வலைகளை வெளிப்படுத்தி ஆறுதலடைந்தனர்.

அந்தவகையில் ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டிற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இலங்கைத் தீவில் காலங்காலமாக தொடர் இனவழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வரும் தமிழர்கள், 2009இல் இடம்பெற்ற இறுதிப்போரில் வார்த்தைகளில் அடக்க முடியாத துன்பத்தை அனுபவித்து இனவழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டனர்.

இறுதிப்போரின் வலிகள் இன்னும் ஆறாத நிலையில் அப்போரில் தமது உறவுகளை இழந்த ஏராளமான மக்கள் இன்னும் தம் உணர்வுகளுடன் நடைபிணங்களாக வாழ்ந்து வருகின்றனர்.

தம்மை யாராவது காப்பாற்ற மாட்டார்களா? என்ற ஏக்கத்தில் சின்னஞ்சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை ஏங்கித்தவித்த நிலை, “பசி, பசி” எனக் குழந்தைகள் அழும்போது செய்வதறியாத நிலையில் பெற்றோர்கள் கலங்கிய அவலநிலை.

பதுங்குகுழிகளைவிட்டு வெளியேவந்தால் தப்பமுடியாது என்றெண்ணி பதுங்குகுழிகளுக்குள்ளேயே தங்கியிருந்த நேரம் அதற்குள்ளேயும் குண்டுகள் விழுந்து உறவுகள் மடிந்தபோது உயிரிழந்த தமது உறவுகளைப் புதைப்பதற்கு இயலாமல் உடலங்களை அவ்வாறே விட்டு ஓடிய நிலமைகள், ஆகியவற்றை எண்ணிப்பாருங்கள்.

இலட்சக்கணக்கில் தமிழ் உறவுகளைப் பலிகொண்ட அந்தப் பேரவலம், தமிழ்த்தேசிய இனத்தின் கூட்டு மன உளவியலில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இந்தநிலையில் அங்கு உறவுகளை இழந்து, தற்போது வாழ்ந்துவருகின்ற மக்கள் தம் உறவுகளை நினைவுக்கூர்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட ஒரு நினைவிடம் தேவை என்பதை அங்குள்ள மக்கள் ஆதங்கத்துடன் கூறிவருகின்றனர்.

உயிரிழந்தோரை நினைவுகொள்ளும் விதத்தில் உலகின் மூத்தகுடிகளில் ஒன்றான தமிழ் இனம், மிக உயர் நாகரீக பண்பாடுகளைக் கொண்டுள்ளது. எம் இன வரலாற்றில் மிக அதிகமான மக்கள் உயிரிழந்த ஒரு அவலம். இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளை நினைவுகூர ஒரு நினைவாலயம் அமைக்கப்படவேண்டியது மிகவும் அவசியமாகின்றது.

ஆழிப்பேரலையினால் உயிரிழந்த மக்களுக்கென முல்லைத்தீவில் மட்டுமல்ல, பல இடங்களில் நினைவுமண்டபம் அமைக்கப்பட்டு அதில் உயிரிழந்த ஒவ்வொருவருடைய பெயரும் குறிக்கப்பட்டுள்ளது.

இது காலாகாலத்திற்கும் உயிரிழந்தோரின் உறவுகளையும், சந்ததியினரையும் நினைவுகூர வழிசமைக்கின்றது. அதேபோன்று முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவாகக் கட்டப்படும் ஆலயத்தில் உயிரிழந்தோரின் பெயர்கள் பொறிக்கப்படுவது தத்தமது உறவுகளை காலாகாலத்திற்கும் அவர்களின் சந்ததிகள் நினைவுகூர வசதியாக இருக்கும். எம் இனத்தின் பண்பாட்டையும் பிரதிபலிப்பதாக அமையும்.

அந்தவகையில் தேசிய பேரவலத்தின் சாட்சியாக நினைவு ஆலயம் முள்ளிவாய்க்காலில் மே -18 நினைவுகூருமிடத்தில் அமைக்கப்படவேண்டும்.

இறந்தவர்களை நாங்கள் அடக்கம்செய்யும்போது கல்லறைகளை அதன்மேல் அமைக்கின்றோம்.

அந்தக்கல்லறைகளில் சம்பந்தப்பட்ட உறவுகள், நினைவுதினங்களில் பால் தெளித்து, படையல்களைப் படைத்து, பூக்கள் சொரிந்து, தீபம் ஏற்றி தங்களுடைய மனக்கவலையை உள்ளத்திலிருந்து வெளிப்படுத்தி அழுது ஆற்றுகின்ற அந்த நிலைக்கு எமது மக்களையும் ஈடுபடுவதற்கு ஒரு நினைவாலயத்தை அமைப்பதற்கு எமது மக்களுக்கு அனுமதிதாருங்கள்.

இனப்பாகுபாடு பாராது, நாம் முள்ளிவாய்க்காலில் ஓர் நினைவாலயம் அமைப்பதற்கு அனுமதிதாருங்கள் எனக் கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.

Share
தொடர்புடையது
Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு...