சஜித்துடன் முரண்பாடு : தேர்தலில் இருந்து விலகிய முன்னாள் எம்.பி
சஜித் (Sajith Premadasa) தொடர்பில் தான் விசனமடைந்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியில் தொடர்ந்தும் தான் இல்லாத காரணத்தால் தனக்கு வாக்களிக்க வேண்டாமெனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும (Ajith Mannaperuma) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் இந்த தேர்தலில் கம்பஹா (Gampaha) மாவட்டத்தில் போட்டியிட வேட்புமனுவில் கையொப்பமிட்டேன்.
கம்பஹா மாவட்டத்தில் 20 வருடமாக அரசியல் அமைப்பாளராக பதவி வகித்துள்ளேன்.
இம்முறை தேர்தலில் போட்டியிட கையொப்பமிட்டாலும் போட்டியிலிருந்து விலகி நிற்க நான் தீர்மானித்துள்ளேன்.
ஐக்கிய மக்கள் சக்தியில் தொடர்ந்தும் நான் இல்லாத காரணத்தால் எனக்கு வாக்களிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
சஜித் பிரேமதாச தொடர்பில் நான் கடும் விரக்தியடைந்துள்ளேன் காரணம் வேட்புமனுவில் கையொப்பமிட்டு 24 மணிநேரத்துக்குள் வேறு ஒருவரை கம்பஹா மாவட்ட அமைப்பாளராக நியமிக்க சஜித் நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சிக்காகவும் ரணிலுக்காகவும் (Ranil Wickremesinghe) வேலை செய்த ஒருவரை அவ்வாறு நியமித்துள்ளார் இதனால் நான் மிகவும் விரக்தியடைந்துள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.