முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி பொரெஸ்ட் ஆகியோருக்கு எதிராகச் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாகக் கூறப்படும் வழக்கை, நவம்பர் 12ஆம் திகதி விசாரணைக்கு முந்தைய மாநாட்டிற்காக (Pre-Trial Conference – PTC) அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (நவம்பர் 06) உத்தரவிட்டது.
யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்ஸி பொரெஸ்ட் ஆகியோர், சுமார் 73 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களையும் உடைமைகளையும் தவறான முறையில் பெற்றதன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்ததாகக் குற்றம் சாட்டிச் சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
இவ்வழக்கு இன்று மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, முறைப்பாடு தரப்பால் இவ்வழக்கு தொடர்பான சில ஆவணங்கள் பிரதிவாதிகள் தரப்பினரிடம் கையளிக்கப்பட்டது.
சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைக் கருத்தில்கொண்ட நீதிபதி, எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி இவ்வழக்கை விசாரணைக்கு முந்தைய மாநாட்டிற்காக அழைக்குமாறு உத்தரவிட்டார்.