அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தைப் பேணுவதன் அவசியம் குறித்து மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளதுடன், அத்தகைய சிறுவர்களின் தகவல்களைப் பகிர வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்கள், காணொளிகள் அல்லது தனிப்பட்ட விபரங்களைச் சமூக ஊடகங்கள் அல்லது பிரதான ஊடகங்கள் மூலம் பகிர்வதைத் தவிர்க்குமாறு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இத்தகைய செயற்பாடுகள் சிறுவர்களின் அடையாளம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்குப் பாரிய பாதிப்பை ஏற்படுத்தலாம்.
அத்துடன், அந்தப் புகைப்படங்கள் மற்றும் விபரங்கள் கடத்தல்காரர்கள் மற்றும் பிற குற்றவாளிகளின் கைகளில் சென்று தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கலாம்.
சிறுவர்களைச் சுரண்டுதல் மற்றும் ஆட்கடத்தல் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு அத்தகைய தகவல்களைப் பயன்படுத்தும் தனிநபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறுவர் விவகார அமைச்சு கடுமையாக எச்சரித்துள்ளது.
அத்தகைய சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அல்லது கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் குறித்த தகவல்கள் இருந்தால், 1929 சிறுவர் உதவி இலக்கம், அருகிலுள்ள பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்டுள்ள சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு அதிகாரி அல்லது சிறுவர் பாதுகாப்பு அதிகாரிக்கு அறிவிக்கலாம்.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் நல்வாழ்வை உறுதிசெய்து அவர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.