கொழும்பிலுள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியேறி 2 வாரங்களுக்கும் மேலாகியும், வீட்டை முறையாக ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது.
ஜனாதிபதிகளின் சிறப்பு சலுகைகளை நீக்கும் சட்டம் கடந்த 10 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, மகிந்த ராஜபக்ச 24 மணி நேரத்திற்குள் விஜேராம மாவத்தையில் உள்ள அரசாங்க இல்லத்திலிருந்து வெளியேறி தங்காலையிலுள்ள தனது தனிப்பட்ட இல்லமான கார்ல்டன் இல்லத்திற்குச் சென்றார்.
இதன்போது இரண்டு வாரங்களுக்குள் வீட்டை உத்தியோகபூர்வமாக அரசாங்கத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மகிந்த ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
இரண்டு வார கால அவகாசம் 24 ஆம் திகதியுடன் முடிவடைந்தது. இது தொடர்பாக நினைவூட்டல் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த வீட்டின் பட்டியலில் உள்ள பொருட்கள் ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமானவை எனவும் வீடு மற்றும் வளாகத்தின் உரிமை அமைச்சின் கீழ் உள்ளது எனவும் அந்த அதிகாரி கூறினார்.
விஜேராம மாவத்தையில் உள்ள வீடு மற்றும் பொருட்களை முறையாக ஒப்படைக்கக் கோரி, ஜனாதிபதி செயலாளர் என்.எஸ். குமநாயக்கவின் கையெழுத்திட்ட கடிதம், மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளருக்கு 24 ஆம் திகதி அனுப்பப்பட்டது.
அவருக்கு வழங்கப்பட்ட வாகனங்கள் முறையாக ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் அதே கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மகிந்தவுக்கு குண்டு துளைக்காத கார் மற்றும் லேண்ட் ரோவர் கார் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குண்டு துளைக்காத வாகனம் ஏற்கனவே பழுது பார்ப்புக்காக ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அவர்களின் மாதாந்த ஓய்வூதியத்துடன் கூடுதலாக வழங்கப்படும் செயலக கொடுப்பனவு மற்றும் மாதாந்திர அதிகபட்ச மதிப்பு 900 லிட்டர் எரிபொருளுக்கு உட்பட்டு செலுத்தப்படும் எரிபொருள் கொடுப்பனவு ஆகியவை 10 ஆம் திகதி முதல் செலுத்தப்படாது எனவும் ஜனாதிபதியின் செயலாளர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.