இலங்கையில் பயணிகள் பயன்படுத்துவது பேருந்துகள் அல்ல லொறிகளே..! பகிரங்க குற்றச்சாட்டு

26 10

இலங்கையில் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுபவை பேருந்துகள் அல்ல அவை லொறிகளாகும். லொறியின் உடல் பாகத்தைக் கொண்டு அவை வடிவமைக்கப்பட்டுள்ளது என இலங்கை மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர், விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் சமத் தர்மரத்ன தெரிவித்துள்ளார்.

வீதி விபத்துக்களுக்கான நிவாரணம் தொடர்பில் இலங்கை மருத்துவ சங்கத்தில் நேற்று(16) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

லொறியின் உடல் பாகத்தைக் கொண்டே இலங்கையில் பயன்படுத்தப்படும் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டூரிஸ்ட் பஸ் என்பதே பேருந்து. பேருந்துகளின் இறக்குமதிக்கு அதிகளவான தீர்வை வரி அறவிப்படுவதால், நாட்டில் உள்ளவர்கள் பயணிகள் போக்குவரத்துக்கு லொறிகளை கொள்வனவு செய்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சுரந்த பெரேரா தெரிவிக்கையில், நாட்டில் பதிவாகும் வீதி விபத்துக்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

பொது போக்குவரத்து வாகனங்களில் செல்வதற்கும் அஞ்ச வேண்டிய இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது.

அண்மையில் கொத்மலை பகுதியில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து பயணிகள் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்ததுடன் 25 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இது மிகப்பெரிய உயிர் சேதமாகும். இவ்வாண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 975 பேர் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

கடந்த 10 வருட காலப்பகுதியில் வருடாந்தம் 2300 தொடக்கம் 2500 இடைப்பட்ட மரணங்கள் பதிவாகுவதை காணக் கூடியதாக உள்ளது.

அந்த வகையில் இதுவரை அண்ணளவாக 12 ஆயிரம் மரணங்கள் பதிவாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

தொழிலுக்கு சென்றவர்கள் மீள வீடு திரும்புவார்களா? என நிச்சயமில்லாத நிலை உருவாகியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version