செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : அநுரவிடம் சஜித் அணி வலியுறுத்தியுள்ள விடயம்

25 68495a5fe4458

வடக்கில் தொடர்ந்து தோண்டப்படும் மனிதப் புதைகுழிகள் தொடர்பில் அநுர அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும் அத்தோடு கடந்த ராஜபக்ச அரசாங்கத்தைப் போல் இந்த விவகாரத்தை அநுர அரசும் கிடப்பில் போடக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

யாழ். செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பில் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “மனிதப் புதைகுழி அகழ்வுக்கு நிதி வழங்குவோம், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என்று வெறும் வார்த்தைகளைக் கூறிவிட்டு இந்த அரசாங்கம் இருக்கக்கூடாது.

வடக்கில் செம்மணி உள்ளிட்ட பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்படும் எலும்புக்கூடுகளைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி உண்மைகளைக் கண்டறிய அரசு முழு வீச்சுடன் செயற்பட வேண்டும்.

குற்றங்கள் நடந்திருப்பின் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விடயத்தில் நீதிமன்றமும் நடுநிலையுடன் முழு கரிசனை செலுத்தும் என்று நம்புகின்றோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version