சிக்கல்களுக்கு மத்தியில் திருகோணமலை வேட்பாளர்களை அறிவித்த சுமந்திரன்
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் முதன்மை வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ச. குகதாசன் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருக்கோணமலை மாவட்டப் பணிமனையில் நேற்று (10) மாலை இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் நால்வரும் ஏனைய கட்சிகளுடன் மூவருமாக மொத்தமாக 7 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
பொது அமைப்புக்கள் பேராயர் தலைமையிலும் பேச்சுவார்த்தை நடாத்தி தீர்மானம் எடுத்தோம். திருகோணமலை மாவட்ட பணிமனையில் கலந்துரையாடி சுமூகமான தீர்வுக்கு வந்துள்ளோம்.
இதில் சண்முகம் குகதாசன், கந்தசாமி ஜீவரூபன், கதிர்காமத் தம்பி சுந்தரலிங்கம், காலி ராஜா கோகுல் ராஜ் ஆகிய நால்வரே தமிழ் அரசு கட்சியின் சார்பில் களமிறங்கவுள்ளனர்.
பலதரப்பட்ட விமர்சனங்கள் மற்றும் சிக்கல்களை எதிர்கொண்டு கலந்துரையாடல் ஒன்றின் பின்பே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது” என்றார்.