சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட இஷாரா செவ்வந்தி நாட்டில் தலைமறைவாகவும், வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லவும் உதவிய நபர்கள் குறித்துக் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் (CCD) தீவிர விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.
இந்த விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் 02 விசேட குழுக்கள் தற்போது வடக்கு மாகாணத்தில் செயற்பட்டு வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. மொத்தம் 04 குழுக்கள் தொடர்ச்சியாக இந்த விசாரணையில் ஈடுபட்டு வருகின்றன.
இஷாராவை இந்தியாவுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் ஆனந்தன் என்பவரின் வீட்டிலிருந்து முன்னர் துப்பாக்கிகளும் ரவைகளும் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், தற்போது வவுனியாவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்: வவுனியாவைச் சேர்ந்த 45 வயதான வர்த்தகர் ஒருவர். இவர் முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட வர்த்தகர் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். எனினும், ஆனந்தனிடம் வழங்கிய துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் எங்கிருந்து கிடைத்தது என்பது தொடர்பில் அவர் இதுவரை எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை என்று காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
இஷாரா செவ்வந்திக்கு ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பில் இதுவரையில் மொத்தம் 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 07 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஏனைய 03 பேர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

