எதிர்வரும் நாட்களில் தேசிய அடையாள அட்டை வழங்கப்படும் போது வரி அடையாள எண்ணையும் வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, அனைத்து மக்களும் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளும் போது அவர்களுக்கு வரி இலக்கம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தரவுகள் கணனி மயமாக்கப்பட்டு வரி தொடர்பான செயற்பாடுகள் வலுப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரி அடையாள எண் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் நடப்புக் கணக்கு ஒன்றை ஆரம்பிக்கும் போதும், கட்டிடத் திட்டங்களுக்கு அனுமதி பெறும்போதும், வாகன பதிவின் போதும், அனுமதிப் பத்திரம் புதுப்பிக்கும் போதும், நில உரிமை பதிவின் போதும் வரி அடையாள எண்ணை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.