இலங்கையில் குவியும் சுற்றுலா பயணிகள்
ஜூலை மாதத்தின் முதல் ஆறு நாட்களில் கிட்டத்தட்ட 24,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையின்படி, ஜூலை மாதத்தில் இதுவரை 23,901 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
ஜூன் மாதத்தில் மொத்தம் 100,388 சுற்றுலாப் பயணிகள் வந்ததாக அதிகார சபை குறிப்பிட்டது.
அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை 648,775 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கக்கூடிய சுற்றுலாத்துறை இன்று படிப்படியாக வளர்ச்சி அடைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
இந்த ஆண்டின் முதல் மாதம் தொடக்கம், இலட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இலங்கையை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி, இந்த ஆண்டின் (2023) ஜனவரி மாதம் 102,545 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்ததுடன், கடந்த பெப்ரவரி மாதம் 107,639 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் 210,184 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். கடந்த ஆண்டில் மார்ச் மாதத்திற்கு மாத்திரமே ஒரு இலட்சத்தைத் தாண்டிய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர்.
இதன்படி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு 106,500 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தார்கள்.
ஏனைய 11 மாதங்களிலும் ஒரு இலட்சத்திற்கும் குறைவான சுற்றுலாப் பயணிகளே வருகை தந்திருந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ஜூலை மாதத்தின் முதல் ஆறு நாட்களில் கிட்டத்தட்ட 24,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
Leave a comment