வருமான வரிக்காகப் பதிவு செய்துள்ள அனைத்து நபர்களும் தமது வருமான வரி அறிக்கைகளை நவம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்திருந்த அறிவிப்பு, நாட்டில் ஏற்பட்ட அனர்த்தச் சூழ்நிலையின் காரணமாகத் தற்போது திருத்தப்பட்டுள்ளது.
வரி செலுத்துவோர் 2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளை 2025 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்கலாம்.
நீட்டிக்கப்பட்ட இந்தக் காலக்கெடுவிற்குள் அறிக்கைகளைச் சமர்ப்பித்தால், தாமதமாகச் சமர்ப்பிப்பதற்கான அபராதம், மதிப்பீடுகளை வெளியிடுதல் அல்லது குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்தல் போன்ற சட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாகாமல் அறிக்கைகளைச் சமர்ப்பிக்க முடியும்.
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலையைக் கருத்தில் கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை அறிக்கைகளைச் சமர்ப்பிக்க முடியாத அனைத்து வரி செலுத்துவோரும், வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள இந்தச் சலுகைக் காலத்தைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.