கடந்த 6 மாதங்களாக அரச உப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊடாகவே உப்பு இறக்குமதி செய்யப்பட்டது என்றும், அந்த உப்பு எங்கே? எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (21) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“எந்த தனியார் துறைக்கும் உப்பு கொண்டுவர அனுமதி வழங்கவில்லை. அண்மையிலேயே அதற்கான அனுமதி வழங்கப்பட்டது. அப்படியென்றால் அரச உப்பு கூட்டுத்தாபனம் கொண்டுவந்த உப்பு எங்கே? ஏன் இந்த உப்பு சந்தைக்கு வரவில்லை.
உப்பு கட்டிகளே இதன்போது கொண்டுவரப்பட்டன. இவை உப்பு வர்த்தகர்களுக்கு ஒப்படைக்கப்பட்டன. இதற்கு என்ன நடந்தது.
இந்தியாவில் உப்பு மெற்றிக் தொன் ஒன்றின் விலை 80 டொலர்களாகும். அதனை கொண்டுவரும் போது உப்பு கிலோவென்றுக்கு அரசாங்கம் 40 ரூபா வரியை அறவிடுகிறது. இதன்படி கிலோவொன்றுக்கான செலவு 24 ரூபாவாகும். சகல செலவுகளையும் சேர்த்தால் ஒரு கிலோ உப்பு 100 ரூபாவுக்கு வழங்கலாம்.
ஆனால் சந்தையில் 350 ரூபா முதல் 400 ரூபா வரையிலான விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.
உப்பை பெற்றுக்கொள்பவர்கள் யார்? புத்தளம் உப்பு கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளராக இருக்கும் ரவி லியனகேவே உப்பு நிறுவனமொன்றின் தலைவராக இருக்கிறார். அவரே இறக்குமதி செய்யப்படும் உப்பு தொகையை அந்த நிறுவனத்துக்கு கொண்டு சென்று 350 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றனர்.
உங்களின் முறை மாற்றம் புதுமையானது. முன்னர் 130 ரூபாவுக்கு விற்பனை செய்தவர்கள் இப்போது விலையை அதிகரித்துள்ளனர்.
அதேபோன்று கணக்காய்வாளர் நாயகம் ஒருவரை நியமித்துக்கொள்ள அரசாங்கத்துக்கு முடியாமல் இருகிறது. இந்த துறையில் 5வருடம் அனுபவமுள்ள பெற்றோலிய கூட்டத்தாகனத்தின் பணிப்பாளர் நாயகத்தை நியமிப்பதற்கே அரசாங்கம் முயற்சித்து வருகிறது.
எனவே நுகர்வோர் அதிகார சபை புறக்கோட்டையில் உள்ள பெட்டிக்கடைகளில் சோதனை நடத்தாமல் அம்பாந்தோட்டை மற்றும் புத்தளத்திற்கு சென்று முடிந்தால் உப்பு எங்கே உள்ளது என்று பரிசோதனை செய்யட்டும்” என்றார்.