நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 36 மணித்தியாலங்களுக்குப் பலத்த மழை மற்றும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று மாலை வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது.
கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
வடக்கு, வடமேல் மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சப்ரகமுவ, மேல், மத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.
மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, அம்பாந்தோட்டை, மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.