மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது – பிரதமர்

25 6831e6dc4144c

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பிரதமர் தலைமையிலான ஒரு குழு அரசில் இருந்து வெளியேறுகின்றது என்றும், அநுரவின் ஆட்சி கவிழப் போகின்றது என்றும் தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் கருத்துரைக்கும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இது ஜனநாயக நாடு. மக்கள் ஆணையை மீறி எவரும் நடக்க முடியாது. மக்களை ஏமாற்றி எவரும் அரசியல் பிழைப்பு நடத்த முடியாது. மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து அரசு நடக்க வேண்டும். இதை மீறி நடந்த கடந்த ஆட்சியாளர்களுக்கு மக்கள் புகட்டிய பாடத்தை எவரும் மறக்கமாட்டார்கள்.

அந்தவகையில், அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சி, மக்களின் அமோக ஆணையுடன் ஆட்சிக்கு வந்தது. மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து நாம் செயற்படுகின்றோம். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றோம்.

இந்நிலையில், குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க எதிரணியினர் பகல் கனவு காண்கின்றனர். பகல் கனவு ஒருபோதும் நனவாகாது என்பதை அவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

அதேவேளை, தேசிய மக்கள் சக்திக்குள் குழப்பம் என்றும், எமது ஆட்சி கவிழப் போகின்றது என்றும் எதிரணியினருக்குச் சார்பான ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன.

இந்த வதந்திச் செய்திகளை நம்பும் அளவுக்கு மக்கள் முட்டாள்கள் அல்லர். ஊடகங்கள் நடுநிலையுடன் செயற்பட வேண்டும். இது தேசிய மக்கள் சக்தி அரசு. மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட அரசு.

எனவே, எந்தவொரு சூழ்ச்சியாலும், வதந்திச் செய்திகளாலும் இந்த அரசைக் கவிழ்க்க முடியாது” எனக் கூறியுள்ளார்.

Exit mobile version