2026 ஆம் ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகள் இன்று (05) ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், தரம் 6 மாணவர்களுக்கான முறையான கல்வித் திட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிமல் முதுன்கொடுவ தெரிவித்துள்ளார்.
தரம் 6 மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டங்கள் ஜனவரி 21 ஆம் திகதியே ஆரம்பிக்கப்படவுள்ளன. அதுவரை மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கான முறையான திட்டங்கள் இல்லாததால் ஆசிரியர்கள் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
தரம் 6 மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பாடப்புத்தகங்களில் நூற்றுக்கணக்கான இலக்கணப் பிழைகள் மற்றும் குறைபாடுகள் உள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிழைகளைச் சரிசெய்வதற்குப் பதிலாக, குறிப்பிட்ட பக்கங்களை அகற்றுமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, சுமார் 8 இலட்சம் பக்கங்கள் அச்சுப் பிரதிகளில் இருந்து அகற்றப்பட வேண்டியுள்ளது. “இந்த வேலையை யார் செய்வது?” என்ற கேள்வியை அதிபர்கள் சங்கம் எழுப்பியுள்ளது.
வரலாற்றில் முதல் முறையாக, பாடசாலை ஆரம்பமாகும் நாளில் வழங்கப்பட வேண்டிய மாணவர் வருகைப் பதிவேடுகள் (Attendance Registers) கூட இதுவரை பாடசாலைகளுக்கு வழங்கப்படவில்லை.
இந்தப் பாடப்புத்தகங்களைத் தயாரிப்பதில் தகுதியான நபர்கள் உள்வாங்கப்பட்டார்களா?
டிஜிட்டல் பிரதிகள் ஏற்கனவே இணையத்தில் பரவியுள்ள நிலையில், அச்சுப் பக்கங்களைக் கிழிப்பதன் மூலம் எவ்வாறு பிழைகளை மறைக்க முடியும்?
எதிர்காலத்தில் பாடநூல்களில் பிழைகள் வந்தால் “பக்கங்களை அகற்றுவதையே” அரசாங்கம் கொள்கையாகக் கொள்ளுமா?
அரசாங்கத்தின் இத்தகைய “முறைசாரா” நடவடிக்கைகள் மாணவர்களின் கல்வியைப் பாதிப்பதோடு, ஆசிரியர்களையும் அதிபர்களையும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

