கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம் பேசி வருகிறது என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் உரையாற்றுகையில்,
அரசாங்கம் மக்களுக்கு இதுவரை காலமும் தெரிவித்து வந்த பொய்களுக்கு மக்கள் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அரசாங்கத்துக்கு பதிலளித்திருக்கின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலில் 68 இலட்சமாக இருந்த வாக்குகளை இந்த தேர்தலில் 45 இலட்சம் வரை அரசாங்கம் குறைத்துக்கொண்டிருக்கிறது.
அதனால் தற்போதாவது பொய் கூறுவதை நிறுத்தி அரசாங்கம் மக்களுக்கு தெரிவித்த விடயங்களை மேற்கொள்ள வேண்டும்.
அரசாங்கம் 23இலட்சம் வாக்குகளை இழந்துள்ளது. அதேபோன்று அதிகமான உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியை அமைக்க முடியாத நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.
ஒருசில மன்றங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கை சமமாக இருக்கின்றன. அதனால் மற்றவர்களின் உதவியை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களை தவிர அனைவரையும் திருடர்கள் என தெரிவித்த இவர்கள், தற்போது எப்படி மற்றவர்களின் அதவை பெறமுடியும்?
அதேபோன்று கொழும்பு மாநகர சபையின் ஆட்சியை அமைப்பதற்கும் அரசாங்கத்துக்கு முடியாமல் இருக்கிறது. அதனால் தற்போது உறுப்பினர்களை பெற்றுக்கொள்ள மில்லியன் கணக்கில் பேரம் பேசப்பட்டு வருகிறது’’ என்றார்.