இலங்கையில் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் கும்பல்களைச் சேர்ந்த 24 முக்கிய குற்றவாளிகள், சர்வதேச நாடுகளிலிருந்து வெற்றிகரமாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர். 2024 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தச் சிறப்பு நடவடிக்கையின் கீழ், கடந்த ஆண்டு 10 பேரும், 2025 இல் 11 பேரும், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 3 பேரும் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் பாதுகாப்பாகத் தலைமறைவாக இருந்துகொண்டு இலங்கையில் குற்றச்செயல்களைத் திட்டமிட்டு இயக்கி வந்த இவர்களுக்கு எதிராகச் சட்டம் தற்போது மிகக் கடுமையாகப் பாய்ந்து வருகிறது.
தற்போது வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் மேலும் 300 குற்றவாளிகள் குறித்த இரகசியத் தகவல்களைப் பொலிஸ் தலைமையகம் திரட்டியுள்ளதோடு, அவர்களைக் கைது செய்ய இன்டர்போல் (Interpol) உதவியுடன் ‘சிவப்பு பிடியாணை’ (Red Notice) பிறப்பிப்பதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எஃப்.யு. வுட்லர், ஏற்கனவே 103 கொடூரக் குற்றவாளிகளுக்கு எதிராகச் சிவப்பு பிடியாணை பெறப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார். “குற்றவாளிகள் எந்த நாட்டில் பதுங்கியிருந்தாலும் அவர்கள் தப்பிக்க முடியாது” என எச்சரித்துள்ள பாதுகாப்புத் தரப்பு, சர்வதேச நாடுகளுடனான பரஸ்பர சட்ட ஒப்பந்தங்கள் மூலம் இவர்களை விரைவாகத் தண்டிப்பதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.