உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பாக இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் இடையிலான சந்திப்பொன்று நாளையதினம்(30.05.2025) இடம்பெறவுள்ளது.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அதிகளவான வாக்குகளைப் பெற்ற கட்சிகளுக்கு தவிசாளர் பதவி வகிப்பதற்கான ஆதரவினை ஏனைய கட்சிகள் வழங்க வேண்டுமென்ற கோட்பாட்டினை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஏற்கனவே தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் எம்.ஏ.சுமந்திரனின் அதே கருத்திற்கு அமைவான கருத்தொன்றினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.
இதற்கு மேலதிகமாக எம்.ஏ.சுமந்திரன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்ற கட்சிக்கு அடுத்ததாக கணிசமான வாக்குகளைப் பெற்ற கட்சி, உப தவிசாளர் பதவியை வகிக்க முடியும் என்ற கோட்பாட்டினையும் குறிப்பிட்டிருந்தார்.
எனவே, குறித்த விடயங்கள் தொடர்பாக உள்ளூராட்சி மன்றில் ஆட்சி அமைப்பது தொடர்பாக மாத்திரமே நாளைய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தமிழரசுக்கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.