முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அரசியல் செயற்பாடுகளில் இருந்து முற்றாக ஒதுங்கி ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
1989ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் களுத்துறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்த இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், கடந்த 2010ஆம் ஆண்டளவில் அரசியல் செயற்பாடுகளை விட்டும் ஒதுங்கிக் கொண்டிருந்தார்.
எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் தனியாகப் பிரிந்து ஐக்கிய மக்கள் சக்தியை ஆரம்பித்த போது சுமார் ஒன்பது வருடங்களின் பின்னர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மீண்டும் அரசியல் களத்துக்குத் திரும்பி, அதில் இணைந்து கொண்டார்.
அவருக்கு அக்கட்சியின் தவிசாளர் பதவியும் வழங்கப்பட்டிருந்தது.
எனினும் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் போக்கில் அதிருப்தி கொண்ட இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், அண்மையில் கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து விலகியிருந்தார்.
தற்போது கட்சி அரசியல் செயற்பாடுகளில் இருந்து முற்றாக ஒதுங்கிக் கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ள அவர், இனி வரும் காலங்களில் எந்தவொரு கட்சியுடனும் இணைந்து செயற்படப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.
அதற்குப் பதிலாக சமூக சேவை விடயங்களில் நாட்டம் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.