நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள அவசரகாலச் சட்டம் ஒருபோதும் அடிப்படை உரிமைகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்பட மாட்டாதென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர் (F.U. Woodler) உறுதியளித்துள்ளார். தவறான தகவல்களைப் பரப்புவதைத் தடுப்பதே இதன் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
பொது நலன்புரிச் செயற்பாடுகள் மற்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், தவறான தகவல்களைப் பரப்பி அச்சத்தை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராகவே இதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இத்தகைய சட்டங்கள், பீதியை ஏற்படுத்தித் தகவல் தொடர்பு தளங்களைத் தவறாகப் பயன்படுத்துபவர்களை மட்டுமே இலக்கு வைத்துச் செயற்படுத்தப்படுகின்றன.
திருத்தப்பட்ட பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 40) கீழ் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் அவசரகாலச் சட்டம் அண்மையில் வெளியிடப்பட்டது.
இந்தச் சட்டம் அனர்த்த மீட்பு நடவடிக்கைகள், பொதுப் பாதுகாப்பு மற்றும் தேசிய ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் வகையில் தற்காலிக அதிகாரங்களை வழங்குகின்றது.
இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்ற கருத்துகளுக்குப் பதிலளிக்கும் வகையில், கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்த அவசரகாலச் சட்டங்கள் கருத்துச் சுதந்திரத்தை அல்லது அரசாங்கத்தின் விமர்சனத்தை ஒடுக்கப் பயன்படுத்தப்பட மாட்டாதென உறுதியளித்தார். விமர்சன அல்லது பாதகமான கருத்துக்களால் தாமோ தமது நிர்வாகமோ கலக்கமடையவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.