சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் அழிந்து விடும் : எலான் மஸ்க்கால் பரபரப்பு
சிங்கப்பூர் (Singapore) உள்ளிட்ட நாடுகள் விரைவில் அழியப்போகின்றன என உலகின் தொழிலதிபரும் மற்றும் எக்ஸ் தள உரிமையாளருமான எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விடயத்தை அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூரில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்திருப்பதாக வெளியானத் தகவலை மேற்கோள்காட்டியே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த பல பத்தாண்டுகளில் சிங்கப்பூரின் குழந்தை பிறப்பு விகிதமானது பெரிய அளவில் சரிந்துவந்துள்ளதுடன் கடந்த 2023 ஆம் ஆண்டு சிங்கப்பூரின் குழந்தை பிறப்பு விகிதமானது வரலாற்றில் இல்லாத அளவுக்கு 0.97 ஆகக் குறைந்துள்ளது.
இதுவே, 1.0 இற்கும் குறைவாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்திருப்பது முதல் முறையாகும் அதாவது ஒரு பெண் ஒன்றுக்கும் குறைவான குழந்தைகளையே பெற்றுக்கொள்கிறார்கள் என்றால் பலரும் ஒரு குழந்தை கூட பெறுவதில்லை என்பதாகிறது.
இதனால் சிங்கப்பூரில் வயதானவர்கள் அதிகம் இருப்பர், தொழிலாளர் குறைவாகும், மனித வளம் குறைந்துவிடும் இதனால் தொழிற்சாலை முதல் உணவு விநியோகம் வரை அனைத்தும் பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.