புனித சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற பக்தர்கள் என்ற போர்வையில் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற 8 பேர் மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுசாக்கலை சோதனைச் சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (13) மற்றும் இன்று (14) முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே இவர்கள் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.
தற்போதைய யாத்திரைக் காலத்தை முன்னிட்டு வெளி மாவட்டங்களிலிருந்து பெருமளவிலான பக்தர்கள் வாகனங்கள் ஊடாக வருகை தருகின்ற நிலையில், அப்பகுதியில் பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மூவரும், இன்று மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஐவருமாக மொத்தம் எட்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஐஸ் (Ice) போதைப்பொருள், கஞ்சா, போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த ‘மதன மோதக’ உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சந்தேகநபர்கள் கொழும்பு, களுத்துறை, காலி மற்றும் எம்பிலிபிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். புனித ஸ்தலங்களுக்குச் செல்லும் யாத்திரிகர்கள் இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கத் தொடர்ந்து கடுமையான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனப் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.