இலங்கையில் இலவச கல்விக்கு ஏற்படும் ஆபத்து
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட கல்விக் கொள்கை கட்டமைப்பின்படி நாட்டின் கல்வி முறையை தனியார் துறைக்கு மாற்றுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக கலைப் பீட ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் தற்போதுள்ள இலவச பல்கலைக்கழக கல்வி நீக்கப்பட்டு கட்டணம் செலுத்தி கல்வி கற்கும் வாய்ப்பு ஏற்படும் என கொழும்பு பல்கலைக்கழக கலைப் பீட ஆசிரியர் சங்கத்தின் தலைவர் கலாநிதி அதுல சமரகோன் தெரிவித்துள்ளார்.
இச்சட்டம் நிறைவேற்றப்படுவதன் மூலம் நாட்டில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வியை அரசாங்கம் முன்னெடுக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கொள்கை கட்டமைப்பிற்கு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன், அது நாடாளுமன்றத்தின் கல்வி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கும் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இம்மாதத்துக்குள் கொள்கைக் கட்டமைப்பு நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாகவும், இது அரசாங்கத்தின் கொள்கைப் பிரேரணை என்பதனால் அதனை நீதிமன்றத்தினால் விசாரணை செய்ய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.