24 66232e472e393
இலங்கைசெய்திகள்

மல்கம் ரஞ்சித்தை நம்ப வேண்டாம்! ரணில் தரப்பு

Share

மல்கம் ரஞ்சித்தை நம்ப வேண்டாம்! ரணில் தரப்பு

தேசிய மக்கள் சக்தி மற்றும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம்; ரஞ்சித் ஆகியோரிடம் ஏமாற வேண்டாம் என தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை மக்களை வலியுறுத்தியுள்ளது.

கர்தினால் ரஞ்சித்துடன் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கடந்த வியாழக்கிழமை நடத்திய சந்திப்பு தொடர்பில் விசேட அறிக்கையொன்றை விடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

இந்தநிலையில் 2019 ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்கிய ஆதரவைப் போன்று கர்தினால் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பாரா என ரங்கே பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சுமார் 272 பேர் கொல்லப்பட்டனர். இது கண்டனத்துடன் நினைவுகூரப்பட வேண்டும்.

2019 அதிபர் தேர்தலின் போது முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச பக்கம் தாம் நின்றதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் சில வருடங்களுக்குப் பின்னர் வாக்குமூலம் அளித்திருந்தார்.

எனினும் முன்னாள் அதிபரால் தான் ஏமாற்றப்பட்டதாக சில நாட்களுக்கு முன்னர் கர்தினால் தெரிவித்திருந்தார். இதன்மூலம் கர்தினால் 2019 இல் 22 மில்லியன் இலங்கையர்களை முன்னாள் அதிபரிடம் ஒப்படைத்தார்.

இதற்குப் பின்னர் தேசத்திற்கு என்ன நடந்தது? இலங்கையின் கடன்களை அடைக்க முடியாமல் விவசாயத் தொழில் வீழ்ச்சியடைந்துள்ளது. மக்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெற முடியாமல் திணறினர். பொருளாதாரம் சீர்குலைந்து சிலர் உயிர் இழந்தனர். மக்கள் சட்டத்தை கையில் எடுத்தனர்.

இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட ஜேவிபி நாடாளுமன்ற வளாகத்தைக் கையகப்படுத்துவதற்கான சதித்திட்டத்தை ஏற்பாடு செய்து அதனை எரியூட்டச்சென்றது.

பாதுகாப்பு படையினரால் நாடாளுமன்றம் காப்பாற்றப்பட்டது. இதன் மூலமே இன்று வரை ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் இன்றைய நிலைமையை கவனமாகப் படித்து, தேசத்தை சீர்குலைக்கும் குழுவுடன் கர்தினால் ரஞ்சித் தன்னை இணைத்துக் கொண்டாரா என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குழு கடந்த வியாழன் அன்று கர்தினாலைச் சந்தித்து, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக எடுக்க உத்தேசித்துள்ள ஏழு நடவடிக்கைகள் குறித்து அவரிடம் விளக்கினர்.

இந்தநிலையில் தேசிய மக்கள் சக்தியின் தலைமையிடம் சில கேள்விகளை எழுப்பவேண்டியுள்ளதாக பாலித ரங்கே பண்டார தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

2019 இல் நடந்த தற்கொலைத் தாக்குதலில், ஜேவிபியின் தேசியப் பட்டியலில் இடம் பெற்றிருந்த இப்ராஹிமின் இரண்டு மகன்கள் அல்லவா ஈடுபட்டனர்? 2019 ஏப்ரல் 21, 2அன்று அப்பாவி மக்களைக் கொன்றதில் இப்ராஹிமின் இரண்டு மகன்களும் நேரடியாக தொடர்பட்டனர்.

எனவே தற்கொலைப் படைத் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய ஒரு உறுப்பினரை ஏன் தேசிய மக்கள் சக்தி தேசியப் பட்டியலில் சேர்த்தது? எனவே கடந்த வியாழன் அன்று தன்னைச் சந்தித்த தேசிய மக்கள் சக்தி குழுவிடம் இருந்து இந்த விடயத்தில் கேள்வி எழுப்பினாரா என்பதை கர்தினால் நாட்டுக்கு தெரிவிக்க வேண்டும்.

தேசிய மக்கள் சக்தியை உருவாக்கிய ஜனதா விமுக்தி பெரமுன என்ற ஜேவிபி உயிர்த்த ஞாயிறு குண்டுதாரிகளைப் போலவே கொலைகாரர்களின் கூட்டமாகும்.

இந்த உண்மையை கர்தினால் புரிந்து கொள்ள வேண்டும். முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து கர்தினால் ஒருமுறை நாட்டை காட்டிக்கொடுத்துள்ளார்.

இந்த துரோகத்தின் காரணமாக இந்த நாட்டு மக்கள் இன்றுவரை தவித்து வருகின்றனர். 2019 இல் இந்த நாட்டு மக்கள் கர்தினாலால் ஏமாற்றப்பட்ட நிலையில், முன்னாள் அதிபரால் கர்தினால் ஏமாற்றப்பட்டார்.

மீண்டும் தேசிய மக்கள் சக்தி மற்றும் கர்தினால் ஏமாற்றப் போகிறோமா என்பதை இந்நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும். இந்த விடயத்தில் மக்கள் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
15 19
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தசுன் ஷானக்க!

2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே...

14 19
செய்திகள்இந்தியா

புதுச்சேரி தேர்தல்: த.வெ.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு? அரசியல் களத்தில் பரபரப்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)...

13 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை உயர்வு: வெதுப்பகப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து நாளை தீர்மானம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, பாண் உள்ளிட்ட வெதுப்பக...

12 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் உயர்வு: சில வகைகளுக்கு அதிக கேள்வி!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (மார்ச் 22, 2026) மரக்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்...