நாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஏனைய அமைப்புகளால் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு, அவை தொடர்பான புகைப்படங்கள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
எனினும், பாதிக்கப்பட்ட பல தமிழ் மொழி பேசுவோர் வாழும் உள்நாட்டுப் பகுதிகளுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 7) மாலை 5 மணி வரையிலும் எந்த ஒரு நிவாரணமும் கிடைக்கவில்லை என அந்தப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
நகரங்களிலிருந்து பல கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அரசாங்கம் இதுவரையிலும் கவனிக்கவில்லை என்றும், அதற்கான பொறிமுறையை அவசரமாக ஏற்படுத்த வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் கோருகின்றனர்.
ஆகக் குறைந்தது, கிராம சேவகர் கூடத் தங்களுடையப் பிரதேசங்களை எட்டிக் கூடப் பார்க்கவில்லை என்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் அலுவலகத்துக்குத் தொலைபேசி அழைப்பு எடுத்து வேதனைப்படுகின்றனர்.
நாலவப்பிட்டிய மற்றும் யட்டியந்தோட்டை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே மேற்கண்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இங்கு இனங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை என்றபோதிலும், நிவாரணப் பணிகள் பின்தங்கிய பகுதிகளுக்குக் கிடைப்பதில் உள்ள தாமதமே இந்த வேதனைக்குக் காரணமாக உள்ளது.
ஆகையால், பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்பான மிகச் சரியான தகவல்களைப் பெற்று, அந்த மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உதவிகளை உடனடியாகக் கிடைப்பதற்கான வழிகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் என நாமும் உரிய தரப்பினரின் கவனத்துக்கு இந்தச் செய்தியின் ஊடாகக் கேட்டுக்கொள்கிறோம்.

