அண்மையில் இடம்பெற்ற இயற்கை பேரழிவையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தியிருந்தார். இருப்பினும், பாதிக்கப்பட்ட பல பிரதேசங்களில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட எந்தவித நிவாரணங்களும் தமக்குக் கிடைக்கவில்லை எனப் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது குற்றஞ்சாட்டுகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கும் முக்கியக் குற்றச்சாட்டுகள் மற்றும் குறைபாடுகள். தனிநபர்களால், குழுக்களால் அல்லது அமைப்புக்களால் வழங்கப்படும் நிவாரணங்கள் கூடப் பாதிக்கப்பட்ட தூரப் பிரதேச மக்களை இதுவரை சென்றடையவில்லை.
வீடுகளைச் சுத்தம் செய்ய அரசாங்கத்தால் வழங்கப்படும் ரூ. 25,000 நிதியைப் பெறுவதற்காக மக்கள் கிராம சேவகர்களை அணுகும்போது, அங்குப் “பதிவு இல்லை” என்ற குறைபாட்டைக் காரணம் காட்டி, சில கிராம சேவகர்கள் நிதியை வழங்க மறுக்கின்றனர் என்று மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பாதிக்கப்பட்டு வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் கடந்த 3 தேர்தல்களிலும் வாக்களித்துள்ளனர் என்பது தெரியவரும் நிலையிலும், அவர்களுக்கு நிவாரணம் மறுக்கப்படுகிறது.
பெருந்தோட்டப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கும் கிராம சேவகர்கள் நிவாரணம் வழங்காமல் இழுத்தடிப்பதாக அறிய முடிகிறது.
அவர்களால் வழங்கப்படும் விண்ணப்பப் படிவங்களில் கையொப்பங்களைப் பெற்றுக்கொள்வதற்குக் கூடப் பல கிராம சேவகர்கள் மறுக்கின்றனர் என அறியமுடிகின்றது.
நிவாரணப் பணிகளில் உள்ள இந்தக் குளறுபடிகள் மற்றும் தாமதங்கள் குறித்து ஜனாதிபதி உள்ளிட்ட இந்த நிவாரணத்துக்குப் பொறுப்பானவர்கள் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.