அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர் நிர்மல சியம்பலாபிட்டியின் பூதவுடலுக்கு, அவர் இன்று (டிசம்பர் 3) பெறவிருந்த பட்டச் சான்றிதழ், கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தரால் சமர்ப்பிக்கப்பட்டது.
மக்களுக்காக நிவாரணப் பணிகளில் ஈடுபடும் சந்தர்ப்பத்தில் விபத்துக்குள்ளாகித் துரதிர்ஷ்டவசமாக அவர் உயிரிழந்தார்.
அவருடைய உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பெறவிருந்த பட்டச் சான்றிதழ் அவருடைய பூதவுடலுக்குச் சமர்ப்பிக்கப்பட்டது.
அவரது சேவைகளைப் பாராட்டும் வகையில், நவம்பர் 30 ஆம் திகதி முதல் விங் கமாண்டர் பதவியில் இருந்து குரூப் கேப்டன் பதவிக்கு அவர் பதவி உயர்வு பெற்றார்.

தலைமை விமானியான 41 வயதான குரூப் கேப்டன் நிர்மல சியம்பலாபிட்டிய, 3,000 மணி நேரத்திற்கும் மேலாக விமானப் பயணம் செய்த அனுபவம் வாய்ந்த விமானி என்று இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
உயிரிழந்த விமானியின் இறுதிக் கிரியைகள் நாளைய தினம் (டிசம்பர் 4, 2025) முழு விமானப்படை மரியாதையுடன் நடைபெறவுள்ளன.