பௌத்த தர்மம், பௌத்த சாசனம் மற்றும் மகாசங்கத்தைப் பாதுகாப்பதைக் சிலர் இனவாதம் என முத்திரை குத்துவதாகவும், ஆனால் அது ஒருபோதும் இனவாத செயல் அல்ல என்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (11) ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இதனைத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
இலங்கையின் அத்திவாரம் பௌத்த மத விழுமியங்களின் மீதே கட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நாமல் ராஜபக்ச, பௌத்த கலாசாரம் மற்றும் தத்துவத்தைப் பாதுகாப்பது நாட்டில் உள்ள அனைத்து சிறுபான்மை மதங்களுக்கும் நன்மையே பயக்கும் என வாதிட்டார். பௌத்த மதத்தைப் பின்னணியாகக் கொண்ட ஒரு நாட்டினால் மட்டுமே மற்றைய அனைத்து மதங்களையும் சமமாகப் பாதுகாக்க முடியும் எனத் தான் ஆழமாக நம்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“நான் ஒரு சிங்கள பௌத்தன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். அதேவேளை, ஏனைய கலாசாரங்களையும் மதங்களையும் பாதுகாப்பதில் நான் எப்போதும் முன்னின்று உழைப்பேன். இதில் நான் யாருக்கும் அஞ்சப்போவதில்லை” என நாமல் ராஜபக்ச தெரிவித்தார். தனது சொந்த மதத்தின் மீது தமக்குள்ள அசைக்க முடியாத நம்பிக்கையே பிற மதங்களை மதிக்கவும் பாதுகாக்கவும் தனக்குக் கற்றுக்கொடுத்துள்ளதாக அவர் விவரித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “தமது சொந்த மதத்தில் நம்பிக்கை இல்லாதவர்களால் மற்றுமொருவரின் மொழி, மதம் அல்லது கலாசாரத்தைப் பாதுகாக்க முடியாது. ஒருவன் தனது அடையாளத்தைப் பாதுகாப்பதையே இனவாதம் என்று கூறுவது ஏற்புடையதல்ல” எனக் குறிப்பிட்டார். தற்போதைய அரசியல் சூழலில் பௌத்த மதத் தலைவர்கள் மற்றும் மத விழுமியங்களுக்கு எதிரான விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில், நாமலின் இந்தக் கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.