வடக்கு அல்லது கிழக்கு என எந்தப் பிரதேசத்தில் யார் கைது செய்யப்பட்டாலும், அவர்கள் கடந்த காலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று (31) இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் குறிப்பிட்டார்.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கைதை எதிர்க்கட்சிகள் அரசியல் பழிவாங்கல் என்று கூறுவதை ஏற்க முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.
கிழக்கில் நடந்த படுகொலைகள் மற்றும் கடத்தல் சம்பவங்களின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பது மக்களுக்குத் தெரியும் என்றும், இவ்வாறான சட்ட நடவடிக்கைகள் நீதியை நிலைநாட்டும் செயல்களே தவிரப் பழிவாங்கல் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்புக்கான புகையிரத சேவை தற்போது பல்வேறு குறைபாடுகளுடன் காணப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், பயணிகளின் நலன் கருதி இந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

