மீண்டும் தீவிரமடையும் கோவிட் தொற்று! இலங்கை தொடர்பில் அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

1

உலகளாவிய ரீதியில் மீண்டும் பரவி வரும் கோவிட் வைரஸின் புதிய திரிபு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கோவிட் வைரஸ் தொடர்பான சிக்கலுக்குரிய மற்றும் ஆபத்தான் நிலைகள் நாட்டில் இல்லையென்றாலும், விமான நிலையங்களில் ஏற்கனவே சில பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், தற்போது இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கோவிட் தொற்றின் புதிய திரிபு கண்டறியப்பட்டுள்ளது. இதனை நாங்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம். அது போன்ற நிலை எமது நாட்டில் இதுவரையில் எதுவும் அடையாளம் காணப்படவில்லை.

எனினும், இது தொடர்பான விழிப்பு நிலையில் நாஙகள் இருக்கின்றோம் என்றும் இதன்போது அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எமது அண்டை நாடான இந்தியாவில் கோவிட் வைரஸின் புதிய திரிபினால் பாதிக்கப்பட்ட 1009 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதுவரை நால்வர் இறந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version