யாழ். மாநகர ஆணையாளருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
யாழ்ப்பாணம் (Jaffna) மாநகர ஆணையாளருக்கு எதிராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் (V. Manivannan) தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு யாழ். மாவட்ட நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று (03) கட்டளைக்காக எடுத்து கொள்ளப்பட்ட போதே இந்த தள்ளுபடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த ஆண்டு அறிமுகமான நீதிமன்றங்கள், நியாய சபைகள் மற்றும் நிறுவனங்களை அவமதிக்கும் சட்ட ஏற்பாட்டின் கீழ் நீதிமன்றை அவமதித்தார் என்ற அடிப்படையில் யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளருக்கு எதிராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் இந்த வழக்கை தொடுத்திருந்தார்.
இதற்கமைய, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மாநகர ஆணையாளர் சார்பில் கடந்த மாதம் 22ஆம் திகதி முன்னிலையான அதிபர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் (M.A. Sumanthiran), சிறுகோரிக்கை நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சிறுகோரிக்கை நீதிமன்றத்திலேயே தாக்கல் செய்ய வேண்டும் என்ற வாதத்தை முன் வைத்திருந்தார்.
அந்நிலையில், வழக்கு உரிய மன்றில் தாக்கல் செய்யப்படவில்லை என்ற அதிபர் சட்டத்தரணியின் வாதத்தை மன்று ஏற்றுக்கொண்டு, வழக்கினை தள்ளுபடி செய்வதாக மாவட்ட நீதிபதி சி.சதீஸ்தரன் குறிப்பிட்டுள்ளார்.