நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கரைவலை கடற்றொழிலாளர்களும் இன்று (09) முதல் தமது தொழில் நடவடிக்கைகளிலிருந்து காலவரையறையின்றி விலகிச் செயற்படத் தீர்மானித்துள்ளனர். கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு முறையான தீர்வு வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டு, கடந்த 05 ஆம் திகதி முதல் கரைவலை கடற்றொழிலாளர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகத் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஐந்தாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தப் போராட்டத்தின் ஒரு கட்டமாகவே, இன்று முதல் நாடு தழுவிய ரீதியில் தொழிலைப் புறக்கணிப்பதாகக் கடற்றொழிலாளர் சங்கங்கள் அறிவித்துள்ளன. அரசாங்கம் இவ்விடயத்தில் உரிய தலையீட்டை மேற்கொண்டு தமக்கான தீர்வைப் பெற்றுத் தரும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.