5b97e19adcee302e008b5e7c
இலங்கைசெய்திகள்

கொழும்பு துறைமுக நகரத்தில் புதிதாக சீன முதலீடு

Share

கொழும்பு துறைமுக நகரத்தில் அடையாளங்காணப்பட்டுள்ள பல்வேறு செயற்திட்டங்களில் புதிதாக 1.2 பில்லியன் டொலர்களை சீனா முதலீடு செய்யவுள்ள நிலையில், இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக மீட்சி தொடர்ந்தும் உதவிகளை வழங்கத்தயாராக இருப்பதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் சின் காங் உத்தரவாதமளித்துள்ளார்.

 

சீன வெளிவிவகார அமைச்சர் சின் காங்கின் உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில் 7 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கடந்த சனிக்கிழமை (24) சீனா சென்றுள்ளார்.

 

சீனாவில் 25 – 28 ஆம் திகதிவரை நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ளும் அவர், பல்வேறு முக்கிய உயர்மட்ட சந்திப்புக்களை நடாத்தியிருப்பதுடன் இலங்கையின் கடன்மறுசீரமைப்பு தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார்.

 

அதன்படி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சீன வெளிவிவகார அமைச்சர் சின் காங் மற்றும் அமைச்சர் அலி சப்ரிக்கு இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போது ‘சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பமானதிலிருந்து இருநாடுகளும் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று மதிப்பளித்தும் ஆதரவளித்தும் வந்திருக்கின்றன. இது இருவேறு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கான சிறந்த முன்னுதாரணமாகக் காணப்படுகின்றது’ என்று குறிப்பிட்ட சின் காங், இருநாடுகளினதும் தலைவர்களால் எட்டப்பட்ட முக்கிய இணக்கப்பாடுகளை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும், இருநாடுகளுக்கும் இடையிலான உயர்மட்ட மற்றும் மக்களுக்கு இடையிலான தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துமாறும், உயர்தரத்திலான ‘ஒரு மண்டலம், ஒரு பாதை’ செயற்திட்டத்தை இணைந்து முன்னெடுப்பதை ஊக்குவிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

 

அதேபோன்று இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கும் இலங்கை மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்கும் அவசியமான உதவிகளை சீனா தொடர்ந்து வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

 

அதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இலங்கையின் தேசிய சுதந்திரம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஆகியவற்றுக்காக தன்னலமின்றி சீன அரசாங்கத்தினாலும் அதன் மக்களாலும் வழங்கப்பட்ட உதவிகளைப் பொக்கிஷமாகக் கருதுவதாகக் குறிப்பிட்டதுடன் கடன்நெருக்கடியைக் கையாள்வதற்கும், தற்காலிக நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கும் சீனா வழங்கிய ஒத்துழைப்புக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

 

மேலும் ‘ஒரு சீனா’ கொள்கையை உறுதியாக நிலைநாட்டுவதற்கும், ‘ஒரு மண்டலம், ஒரு பாதை’ செயற்திட்டத்தைக் கட்டியெழுப்புவதை உறுதிப்படுத்துவதற்கும், பல்வேறுபட்ட விடயங்களில் சீனாவுடன் நெருக்கமாக ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கும், இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்புத்தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் இலங்கை தயாராக இருப்பதாகவும் இதன்போது அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டார்.

 

இச்சந்திப்பின்போது இருநாடுகளினதும் அக்கறைக்குரிய சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

 

அதேவேளை இன்று சீன துறைமுக தொழில்நுட்பவியல் கூட்டுத்தாபனத்தின் (சைனா ஹார்பர் என்ஜினீயரிங் கோப்பரேஷன்) தலைவர் மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகளைச் சந்தித்த அமைச்சர் அலி சப்ரி, இலங்கையில் அவர்களது முதலீடுகளின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடினார். அதுமாத்திரமன்றி கொழும்பு துறைமுக நகரத்துக்குள் அடையாளங்காணப்பட்டுள்ள பல்வேறு செயற்திட்டங்களில் புதிதாக சுமார் 1.2 பில்லியன் டொலர் முதலீட்டை மேற்கொள்ளவிருப்பதாக இச்சந்திப்பின்போது சீன துறைமுக தொழில்நுட்பவியல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் அமைச்சர் அலி சப்ரியிடம் தெரிவித்துள்ளார்.

 

அதேபோன்று எக்ஸிம் வங்கியின் (சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கி) தலைவர் வூ ஃபுலினுடனான சந்திப்பின்போது, இலங்கையின் தற்போதைய கடன்மறுசீரமைப்புச் செயன்முறையின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆராயப்பட்டது. அத்தோடு இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சிக்கு சீனா ஆதரவு வழங்குமென எக்ஸிம் வங்கியின் தலைவர் தன்னிடம் உறுதியளித்ததாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...