நாட்டில் ஏற்பட்ட பேரிடர் நிலைமையினால் பாதிக்கப்பட்டு, பெற்றோரை இழந்த சிறுவர்கள் தொடர்பில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, குறித்த சிறுவர்கள் சமூக, நலன்புரி நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவை திணைக்களத்தின் கீழ் பாதுகாக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் (NCPA) பணிப்பாளர் ஷானிக்கா மலல்கொட இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
பெற்றோரை இழந்த சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரிக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் திணைக்களத்தின் கீழ் மேற்கொள்ளப்படும்.
அதிதீவிர வானிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண் சரிவால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை தொடர்பான தரவுகளைச் சேகரிக்கும் பணி மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, ‘டித்வா’ சூறாவளி ஏற்படுத்திய பேரழிவுகளால் இலங்கையில் 275,000க்கும் அதிகமான சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.