அதிதீவிர வானிலையால் துண்டிக்கப்பட்ட மின்சார இணைப்புகளை வெகு விரைவில் மீள இணைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் நொயெல் பிரியந்த இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார். சுமார் 39 இலட்சம் பயனாளர்களுக்கான மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், 24 மணித்தியாலத் தொடர் செயற்பாட்டின் ஊடாக சுமார் 88 வீதமான மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மொத்தமாக 16,771 மின்பிறப்பாக்கிகள் (Generators/Distribution Transformers) பாதிப்படைந்த நிலையில், அவற்றில் பெரும்பாலானவை முழுமையாக வெள்ள நீரில் மூழ்கடிக்கப்பட்டன. பாதிக்கப்பட்டவற்றில் 14,599 மின்பிறப்பாக்கிகளின் செயற்பாடுகள் வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மின் இணைப்புகளின் திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர், ஹெட்டிபொல பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் நொயெல் பிரியந்த வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.