அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடன்களை மீளச் செலுத்துவதற்கான காலத்தை, பாதிப்புகளின் அடிப்படையில் 3 முதல் 6 மாதங்களுக்குத் தள்ளுபடி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், அவசர நிலைமைகளின் போதான புதிய கடன்களை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் இலங்கை மத்திய வங்கியால் (CBSL) சகல வங்கிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு முழுக்கடன் அல்லது கடனுக்கான வட்டியை மீளச் செலுத்துவதற்கான காலத்தை 3 முதல் 6 மாதங்கள் வரை, பாதிப்புகளை ஆராய்ந்து தள்ளுபடி செய்யுமாறு இலங்கை மத்திய வங்கியினால் கடந்த 5ஆம் திகதி சகல வங்கிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
கடன் மீள் செலுத்தல் தள்ளுபடி செய்யப்படும் காலப்பகுதிக்குள், கடன் ஒப்பந்தத்தின் போது குறிப்பிடப்பட்ட வட்டியை விட அதிக வட்டி அறவிடாமல் இருப்பதற்கும், காலம் தாழ்த்தப்படுவதற்கு மேலதிக வட்டி அறவிடாமல் இருப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் இவ்வாறு நிவாரணக் கடன் வழங்குவதற்காக 81 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியைப் புதிய கடன் வழங்கலின் போது பயன்படுத்த முடியும்.
டிசம்பர் மாதத்துக்குள் இந்தக் கடனை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு உரிய தரப்பினருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்தில் இதற்காக மேலும் 500 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சி (MSME) பிரிவின் கடன் திட்டங்களை ஒரு வரையறைக்குள் ஒருங்கிணைத்தல் மற்றும் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட MSME-களை மீளக் கட்டியெழுப்புவதற்கு உதவும் கடன் வழங்கும் திட்டத்தை அமுல்படுத்துவதற்கான யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கைத்தொழில், உற்பத்தித் துறைகள் மற்றும் சுற்றாடல் நேய நிதியாக்கலுக்கான பல்வேறு கடன் திட்டங்களை ஒருங்கிணைத்து, 2026ஆம் ஆண்டிலிருந்து RE-MSME PLUS திட்டத்தை அமுல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
பேரிடர் நிலையால் பாதிக்கப்பட்ட MSME-களை மீண்டும் உயிரூட்டுவதற்காக பேரிடர் நிவாரணக் கடன் திட்டம் எனும் பெயரில் புதிய கடன் திட்டத்தை அமுல்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் கீழ் அண்ணளவாக 130,000 தொழில்முயற்சிகளுக்கு உடனடி மற்றும் மத்திய கால நிதியுதவி வழங்கும் செயன்முறையை அறிமுகம் செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தேசக் கடன் திட்டத்தின் கீழ் நுண் தொழில்முயற்சிகளுக்கு ரூ. 250,000 வரையும், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கு ஆகக்கூடியது ரூ. 1,000,000 தொகையையும் 6 மாத சலுகைக் காலத்துடன் வருடாந்தம் 3% வட்டி வீதத்தில் 3 ஆண்டு காலப்பகுதிக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடன் திட்டத்தை அமுல்படுவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.