நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக, மட்டக்களப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகள் மனிதாபிமான உணர்வுடன் ஒரு முன்மாதிரியான பணியைச் செய்துள்ளனர்.
தமது இரண்டு நாட்களுக்கான உணவில் ஒருவேளை உணவை நன்கொடையாக வழங்கிய சிறைக்கைதிகள், அதனை உலர் உணவுப் பொருட்களாக மாற்றி நேற்று (டிசம்பர் 5) உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளனர்.
இந்த உணவுப் பொருட்கள் சிறைக் கைதிகளின் ஊடாகச் சிறைச்சாலை அத்தியட்சகரிடம் வழங்கப்பட்டன. பின்னர், இந்த உலர் உணவுப் பொதிகளைச் சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜிடம் கையளித்தார்.
சிறைக் கைதிகள், தாம் சிறைக்குள் இருந்தபோதும் சமூகத்தின் மீதும் பாதிக்கப்பட்ட மக்கள் மீதும் கொண்டிருந்த கரிசனையை இந்த நன்கொடை வெளிப்படுத்துவதாக அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.