மட்டக்களப்பில் போதிய பெற்றோல் கையிருப்பு: “செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்” – மாவட்ட அரசாங்க அதிபர் எச்சரிக்கை!

articles2Fkdr4RAxh3Zzhkl5WtR4D

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதியளவு பெற்றோல் (Petrol) கையிருப்பில் இருப்பதால், பொதுமக்கள் தேவையில்லாமல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நின்று செயற்கையாகத் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தெரிவித்துள்ளார்.

மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (டிசம்பர் 1) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

மாவட்டத்தில் நாளாந்தம் 1,65,000 லீற்றர் எரிபொருள் தேவை இருந்தபோதிலும், கையிருப்பில் இருந்து இதுவரை 2,50,000 லீற்றர் விநியோகிக்கப்பட்டுள்ளது. மேலும் 18,000 லீற்றர் விநியோகிக்கத் தயாராக இருக்கின்றது.

6,500 லீற்றர் கொள்வனவு கொண்ட 35 பவுசர்கள் கொள்வனவுக்காக அனுப்பப்பட்டுள்ளதுடன், அவை நாளை மட்டக்களப்பை வந்தடையும்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நாளாந்தம் 3,000 லீற்றர் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இன்று 6,000 லீற்றர் முடிவடைந்துள்ளது. எனவே இது தேவையில்லாது கொள்வனவு செய்யப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.”

கொள்வனவு செய்த பெற்றோல் பவுசர்கள் நாளை மட்டக்களப்பை வந்தடையும்போது, நாளைக்கு பெற்றோல் வாங்குவதற்கு ஆள் இல்லாத நிலை ஏற்படும். எனவே பொதுமக்கள் தேவையில்லாமல் பதட்டப்பட வேண்டாம்.

அவ்வாறு பதட்டப்பட்டுப் பெற்றோலைக் கொள்வனவு செய்து பதுக்கும்போது, அத்தியாவசியச் சேவைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்குப் பெற்றோல் கிடைக்காத நிலை ஏற்படும். எனவே செயற்கைத் தட்டுப்பாட்டை பொதுமக்கள் ஏற்படுத்த வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version