கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி, நிட்டம்புவ நகரில் வைத்து பொலன்னறுவை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஜயந்த குணவர்தன ஆகியோர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 12 பேருக்கு மரண தண்டனை விதித்து கம்பஹா மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய விசேட தீர்ப்பாயத்தினால் (Trial-at-Bar) இந்த அதிரடித் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மொத்தம் 41 பேருக்கு எதிராகச் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நீண்ட கால விசாரணைகளின் பின்னர், 12 பேர் மீதான கொலைக் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதையடுத்து அவர்களுக்கு இந்த உச்சகட்ட தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, போதிய சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் இந்த வழக்கிலிருந்து 23 பேர் நிரபராதிகளாகக் கருதி முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2022 மே மாதம் நாட்டில் நிலவிய அரசியல் நெருக்கடியின் போது, ஆவேசமடைந்த கும்பலால் முன்னெடுக்கப்பட்ட இந்தத் தாக்குதல், ஒரு மக்கள் பிரதிநிதியின் உயிரைப் பறித்த மிலேச்சத்தனமான செயலாக நீதிமன்றத்தால் வர்ணிக்கப்பட்டது. இன்றைய தீர்ப்பு வழங்கப்பட்ட போது நீதிமன்ற வளாகத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சுமார் நான்கு வருடங்களாக இழுபறியில் இருந்த இந்த வழக்கு, இன்றைய தீர்ப்பின் மூலம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. ‘அரகலய’ காலப்பகுதியில் இடம்பெற்ற வன்முறைகளில் ஒரு முக்கிய சம்பவமாக இது கருதப்பட்ட நிலையில், சட்டத்தைக் கையில் எடுப்பவர்களுக்கு இதுவொரு பாரிய எச்சரிக்கையாக அமையும் எனச் சட்ட வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இந்தத் தீர்ப்பின் மூலம் தங்களுக்கு நீதி கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.