கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை இராணுவம் விட்டு வெளியேற ஜனாதிபதி உத்தரவு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

MG 8826

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளதாகவும், இதற்கு அமைவாக மிக விரைவாக இராணுவம் நிலை கொண்டுள்ள இந்தக் காணிகளை விட்டு வெளியேற உள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவிக்கையில்,”இதை நான் சொல்லவில்லை. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்த விடயமே. மாவீரர்களை நினைவு கூறுவதற்கான உரிமை நூற்றுக்கு நூறு அந்த மக்களுக்கு உள்ளது,” என்று அமைச்சர் கூறினார்.

தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களின் பல காணிகளை விடுவித்து வரும் நிலையில், துயிலும் இல்லங்களில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரையும் முற்று முழுதாக அந்தப் பகுதியில் இருந்து விடுவித்து, மக்கள் அவர்களின் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான முழு உரிமையையும் வழங்கும் வகையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாதுகாப்புச் செயலாளருக்கு இந்தக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, இராணுவம் நிலை கொண்டுள்ள துயிலும் இல்லக் காணிகளை விட்டு மிக விரைவில் வெளியேற உள்ளதாகவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதியளித்துள்ளார்.

Exit mobile version