மன்னார் தீவில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் மக்களின் வாழ்வுரிமைச் சாத்வீகப் போராட்டம், திங்கட்கிழமை (நவம்பர் 10) அன்று நூறாவது (100) நாளை எட்டியுள்ளது. இதனை நினைவுகூரும் விதமாக, அன்று இரவு 7.30 மணியளவில் தீப்பந்த எழுச்சிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தலைமையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆண்கள், பெண்கள், போராட்டக் குழு உறுப்பினர்கள் எனப் பலர் கையில் அமைதியான முறையில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு காற்றாலைத் திட்டங்களுக்குத் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
மக்களின் வாழ்விடங்கள், நாட்டின் வளம் ஆகியவற்றைப் பாதுகாத்து வருங்காலச் சந்ததியினரிடம் கையளிக்கும் இந்தப் போராட்டம், தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தொடரும் எனப் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்ட தீப்பந்த எழுச்சிப் போராட்டம், நாளை (நவம்பர் 12) முதல் கிராமங்கள் தோறும் இடம்பெறும் என அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் அறிவித்துள்ளார்.
போராட்டத்தின் 100ஆவது நாளை நினைவுகூரும் இந்நாளில், மக்கள் சார்பில் மூன்று முக்கியக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மன்னார் தீவில் முன்னெடுக்கப்படும் 14 காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை உடன் நிறுத்தி, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
மன்னார் தீவில் எந்த ஒரு இடத்திலும் கனிய மணல் அகழ்வுக்கு எந்த அனுமதியும் வழங்கக் கூடாது.
ஏற்கனவே அமைக்கப்பட்ட (தம்பபவனி, நறுவிலிக்குளம்) 2 காற்றாலை உயர் மின் உற்பத்தித் திட்டங்களினால் ஏற்பட்ட பாதிப்புக்களை உடன் நிவர்த்தி செய்தல் வேண்டும்.
அரசாங்கம் தமது மக்களின் இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக எழுத்து மூலம் அறிவிக்கும் பட்சத்தில், அறவழிப் போராட்டம் நிறைவுக்கு வரும் எனப் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.