நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாகக் கூறிக் கொண்டு ஆட்சியேறியவர்கள் இன்று, புதிய அரசமைப்பை உருவாக்குவதாகக் கதைகளைக் கூறிக் கொண்டிருக்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்குப் பதிலாக அதனை மேலும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையே தற்போது அரசு முன்னெடுத்து வருகின்றது, இந்த அரசு பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றது என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில், “முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கஜூ உண்பதற்காக கோடிக்கணக்கில் செலவிட்டுள்ளதாக இந்த அரசு குற்றஞ்சாட்டியது. ஆனால் தற்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதனை விட பாரிய ஒரு தொகையை செலவிட்டிருக்கின்றார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாகக் கூறிக் கொண்டு ஆட்சியேறியவர்கள் இன்று, புதிய அரசமைப்பை உருவாக்குவதாக கதைகளைக் கூறிக் கொண்டிருக்கின்றனர். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்குப் பதிலாக அதனை மேலும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அவர்கள் எடுத்து வருகின்றனர்.
அன்று மக்களிடம் கூறிய அனைத்தையும் மறந்து நிறைவேற்று அதிகாரத்தை அவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளுக்கு ஓரளவுக்கேனும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். எவ்வாறிருப்பினும் கடந்த காலங்களில் இந்தச் சிறப்புரிமைகள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதையும் நாம் பார்த்திருக்கின்றோம்.
எனவே, இதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் போது அவற்றை அரசியல் பழிவாங்கல்களுக்காக முன்னெடுக்காமல் இருப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். அந்தப் பொறுப்பை அரசு ஏற்க வேண்டும்.
ஆனால், அரசு வெறுமனே அரசியல் பழிவாங்கல் நோக்கத்தில் மாத்திரமே அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது. அரசின் அனுமதியுடன் எவ்வித சோதனைகளும் இன்றி 323 கொள்கலன்கள் துறைமுகத்தில் இருந்து விடுக்கப்பட்டன. அவற்றில் இருந்த இரு கொள்கலன்களில் இருந்தே அண்மையில் பெருமளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இந்தக் கொள்கலன்களில் போதைப்பொருட்கள் இருப்பதாகச் சர்வதேச நிறுவனங்கள் எச்சரித்திருந்த நிலையிலும், அந்த எச்சரிக்கையை உதாசீனப்படுத்தி இவற்றை எவ்வித சோதனைகளும் இன்றி விடுவிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது.
எனவே, இந்த விடயத்தில் அரச தரப்பிலும் ஒத்துழைப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பது மிகத் தெளிவாகின்றது. எனவே, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எனப் பார்த்துக் கொண்டிருக்காமல் உடனடியாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசை வலியுறுத்துகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.