நாட்டை வந்தடைந்த ஈரான் ஜனாதிபதி
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி(Ebrahim Raisi) சற்று முன்னர் மத்தளை விமான நிலையத்தின் ஊடாக இலங்கையை வந்தடைந்துள்ளார்.
ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு அவர் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார்.
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை பிரதமர் தினேஷ் குணவர்த்தன(Dinesh Gunawardena), வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி(Ali Sabry), கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்(Senthil Thondaman) ஆகியோர் மத்தளை விமான நிலையத்தில் வரவேற்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்(Ranil Wickremesinghe) விசேட அழைப்பின் பேரில், ஈரான் ஜனாதிபதி ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளதுடன், 2008 ஏப்ரல் மாத்தில் அப்போதைய ஈரான் ஜனாதிபதி மொஹமட் அஹமதிநெஜாட்டின் இலங்கை விஜயத்திற்குப் பின்னர், ஈரான் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.
ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளன.
மகாவலி திட்டத்தின் பின்னர், நாட்டின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டமாக வரலாற்றில் இணையும் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் ஈரான் மற்றும் இலங்கை ஜனாதிபதிகளின் தலைமையில் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.
Comments are closed.