இலங்கை
மேல் மாகாண முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு அறிவிப்பு
மேல் மாகாண முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு அறிவிப்பு
மேல் மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து முச்சக்கர வண்டிகளும் மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையில் (Road Passenger Transport Authority – Western Province) பதிவு செய்து அனுமதிப்பத்திரம் பெறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பிரசன்ன சஞ்சீவ (Prasanna Sanjiva) நேற்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விபரங்களை 0112864542 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
பத்தரமுல்லை, ரண்மங்க வீதியில் அமைந்துள்ள மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், போக்குவரத்து அதிகாரசபையினால் ஸ்தாபிக்கப்பட்ட முச்சக்கரவண்டி பணியகம் தொடர்பான கையேடு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு பதிவு செய்வதற்கு 3000 ரூபா கட்டணம் அறவிடப்படும் என்றும், முச்சக்கரவண்டி பதிவுக்கு 3000 ரூபாவும், வருடாந்த பயணிகள் போக்குவரத்து சேவை அனுமதிப்பத்திரத்திற்கு 1000 ரூபாவும், சாரதி பதிவுக்கு 1500 ரூபாவும் அறவிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேல் மாகாணத்தில் உள்ள பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் 8 பிராந்திய அலுவலகங்களில் முச்சக்கரவண்டி பதிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை www.wptaxi.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேல் மாகாணத்தில் மூன்று இலட்சத்து ஐம்பத்து நான்காயிரம் (354,000) முச்சக்கர வண்டிகள் இருப்பதாகவும் அதில் சுமார் இருபத்தொன்பதாயிரம் முச்சக்கர வண்டிகள் தற்போது மேல் மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே முச்சக்கரவண்டி பதிவுகளுக்கு ஜூன் 30 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படும் எனவும், ஜூலை 1ஆம் திகதி முதல் அனைத்து முச்சக்கரவண்டிகளும் வீதி பரிசோதகரால் பரிசோதிக்கப்பட்டு, பதிவு செய்யாத முச்சக்கரவண்டிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.