இலங்கை
சாணக்கியன் மீது இடம்பெற்ற தாக்குதல் முயற்சி
சாணக்கியன் மீது இடம்பெற்ற தாக்குதல் முயற்சி
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆரையம்பதி வட்டார தலைவர் ஒருவர் தாக்குவதற்கு முற்பட்டுள்ளார்.
அண்மையில் மன்னம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் போது 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகவும் மட்டக்களப்பில் இயங்கி வரும் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகளின் பிரச்சனை தொடர்பாகவும் இன்றைய தினம் (17.07.2023) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது வீதி போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இன்றி 10 பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் இதன் பின் அரசியல் பின்னணி இருப்பதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
ஆகவே இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது சட்ட விரோதமான முறையில் இயங்கி வரும் பேருந்துகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகாரியின் அசமந்த செயற்பாட்டின் காரணமாக இன்று 11 உயிர்கள் இழக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு நடவடிக்கை எடுக்க கோரியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினர்.
குறித்த விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கும் போது உள்நுழைந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் இருவர் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை தாக்குவதற்கு முற்பட்டதன் காரணமாக போராட்டக்காரர்களால் நையப்புடைக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
இன்றைய தினம் பொலிஸாரின் உதவியுடன் சாணக்கியன் இராசமாணிக்கம் பேருந்துகளின் அனுமதிப்பத்திரங்களையும் அதிரடியாக சோதனை செய்தார்.
ஒழுங்கான முறையில் விதிப்போக்குவரத்து அனுமதி பத்திரங்கள் இன்றி போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகள் சேவையில் ஈடுபடுகின்ற காரணத்தினால் குறுந்தூர பேருந்து சாரதிகளுக்கும் நெடுந்தூரப் பேருந்து சாரதிகளுக்கும் இடையில் போட்டித் தன்மை காரணமாகவே இந்த விபத்துக்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login