மொரட்டுவை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வக சோதனையின் போது, வெளியேறிய இரசாயனப் பொருளை சுவாசித்த 13 மாணவிகள் உட்பட 19 பேர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் 13 மாணவிகள், 5 பெண் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலையைச் சுத்தப்படுத்தும் பணிக்காக வந்திருந்த ஒரு தாய் ஆகியோரும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. பாடசாலை ஆய்வகத்தில் (Laboratory) சோதனை ஒன்றினை முன்னெடுத்த வேளையில் எதிர்பாராத விதமாகப் பரவிய இரசாயன வாசனையைச் சுவாசித்ததால் இவர்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் ஒவ்வாமை ஏற்பட்டதாகத் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்துப் பாணந்துறை ஆதார வைத்தியசாலையின் செய்தித் தொடர்பாளர் கருத்துத் தெரிவிக்கையில், “வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. எவருக்கும் உயிருக்கு ஆபத்தான அல்லது கவலைக்கிடமான நிலை ஏற்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் தொடர்ச்சியான கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்துப் பாடசாலை நிர்வாகம் மற்றும் கல்வி அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஆய்வகப் பரிசோதனைகளின் போது உரியப் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்தும், கசிவு ஏற்பட்ட இரசாயனப் பொருள் எது என்பது குறித்தும் கண்டறிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

