இலங்கையில் வாகன இறக்குமதி விலைகள் வரம்புகளைத் தாண்டி அதிகரிக்கக்கூடும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே எச்சரிக்கை விடுத்துள்ளார். வாகனங்களுக்கு 15 சதவீத வரி விதிக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளதைத் தொடர்ந்து அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இந்த விலையேற்றம் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்குப் (Budget) பின்னர் நடைமுறைக்கு வரும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பிரசாத் மானகே இது குறித்து மேலும் விளக்கமளித்துள்ளார்.
இறக்குமதியாளர்கள் தற்போது மொத்த விலையில் 15 சதவீத தள்ளுபடியைப் பெறுகிறார்கள். அதாவது, வாகனத்தின் மதிப்பில் 85 சதவீதம் மட்டுமே வரிக்கு உட்பட்டது. எனினும், வரவு செலவுத் திட்டத்திற்குப் பின்னர் இந்த 15 சதவீத தள்ளுபடியை நீக்க வாய்ப்புள்ளது.
இந்தத் தள்ளுபடி நீக்கப்பட்டால், ஜப்பானில் தயாரிக்கப்பட்ட குறைந்த விலை அல்டோ முதல் உயர் ரக வாகனங்கள் வரையிலான அனைத்து வாகனங்களின் விலையும் கணிசமாகக் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, 2015 ஆம் ஆண்டு முதல் இறக்குமதியாளர்கள் பெற்று வரும் இந்தத் தள்ளுபடியை நீக்க வேண்டாம் என அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
இதன் அடிப்படையில் புதிய வரிக்குப் பிறகு, ஒரு சுஸுகி வேகன் ஆர் வாகனத்தின் விலை சுமார் 400,000 ரூபாவும், அதே நேரத்தில், ஒரு டொயோட்டா லேண்ட் குரூசரின் விலை குறைந்தது 3 மில்லியன் ரூபாவும் அதிகரிக்கக்கூடும் என்றும் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.

