யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

யோஷித ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, பூர்வாங்க விசாரணை மாநாட்டிற்காக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த வழக் கானது இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அரச சட்டத்தரணி ஒஸ்வல்ட் பெரேரா நீதிமன்றத்தில் ஆஜராகி, இந்த வழக்கின் பூர்வாங்க விசாரணை மாநாட்டிற்கான திகதியொன்றை ஒதுக்குமாறு கோரினார்.

இவ்வழக்கின் இரண்டாவது பிரதிவாதியான டெய்ஸி ஃபொரஸ்ட் தொடர்பில் முறைப்பாட்டாளர்களின் நிலைப்பாட்டை இதன்போது அறிவிக்க எதிர்பார்ப்பதாகவும், குற்றப்பத்திரிகையில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் குறித்தும் அன்றைய தினம் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரச சட்டத்தரணி தெரிவித்தார்.

வழக்கு தொடர்பில் முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்ட நீதிபதி, இந்த வழக்கை பூர்வாங்க விசாரணை மாநாட்டிற்காக ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

முறையற்ற வகையில் ஈட்டப்பட்ட சுமார் 59 மில்லியன் ரூபா பணத்தை வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்ததன் ஊடாக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாக இரு பிரதிவாதிகளுக்கும் எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version